உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. முகமது ஷமி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இங்கிலாந்தில் நடைபெறும் 12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்கு தெரிவாகும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுத்மn;டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில்  Southampton நேற்று இடம்பெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். விஜய் சங்கர் காயத்தில் இருந்து தேறிவிட்டதால் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுபபெடுத்தாடியது . இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்
ரோகித் சர்மா (1 ஓட்டம், 10 பந்து) சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இந்த உலக கிண்ண கிரிக்கெட்டில் இந்திய விக்கெட்டை கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் தான். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும், ராகுலும் அணியை சரிவில் இருந்து சற்று மீட்பது போல் தெரிந்தது. ஸ்கோர் 64 ஓட்டங்களை எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி பிரித்தார். அவரது பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் (30 ஓட்டங்கள்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விஜய் சங்கர் வந்தார்.மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்றது. ஓரளவு பவுன்சும் காணப்பட்டது. இந்த சாதகமான சூழலை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்தி அச்சுறுத்தினர். முஜீப் ரகுமான், முகமது நபி, ரஷித்கான், ரமத் ஷா ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது சுழல் தாக்குதலை மேற்கொண்டு இந்திய அணி வீரர்களை அச்சுறுத்தினர்.
தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் 29 ஓட்டங்களுடன் (41 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார். விராட் கோலியும் (67 ஓட்டங்கள், 63 பந்து, 5 பவுண்டரி) முகமது நபியின் சுழல் பந்த வீச்சில் ஆட்டமிழந்தார்..
இந்திய அணியின் முன்னால் தலைவர் வீரர் டோனியும், கேதர் ஜாதவும் இணைந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர போராடினர். ஆனால் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை சமாளித்து டோனியால் ஒன்று, இரண்டு ரன் வீதம் தொடர்ச்சியாக எடுக்க இயலவில்லை. 33 பந்துகளில் அவர் ஓட்டங்களை குவிக்கவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளான அவர் ரஷித்கானின் பந்து வீச்சில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து சிக்சருக்கு முயற்சித்த போது ஏமாந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். டோனி 28 ஓட்டங்களை (52 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார்.

 கடைசி கட்டத்தில் கேதர் ஜாதவ் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஆடினார். எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவும் (7 ஓட்டங்கள்) மிளிரவில்லை. கேதர் ஜாதவ் 52 ஓட்டங்களில் (68 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. மொத்தம் 152 பந்துகளை இந்திய வீரர்கள் ஓட்டங்களின்றி விரயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களை முழுமையாக ஆடிய ஆட்டங்களில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் குறைந்த ஓட்டங்கள் இதுதான். ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்படின் நைப், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
குறைவான ஓட்ட இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவசரப்படாமல் நிதான போக்கை கடைபிடித்து துடுப்பெடுத்தாடிய போதிலும் இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா 10 ஓட்டங்களிலும், அணித்தலைவர் குல்படின் நைப் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
3 ஆவது விக்கெட்டுக்கு ரமத் ஷாவும், ஹஸ்மத்துல்லா ஷகிடியும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 26.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 100 ரன்களை எட்டியது. 
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச அதற்கு உடனடி பலன் கிடைத்தது. ஒரே ஓவரில் ரமத் ஷா (36 ஓட்டங்கள்), ஹஸ்மத்துல்லா (21 ஓட்டங்கள்) இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.;. 
விக்கெட் சரிவுக்கு மத்தியில் முகமது நபி, பும்ராவின் ஓவரில் ஒரு சிக்சரையும் அடித்தார்.

கடைசி 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 48 ஆவது ஓவரில் முகமது ஷமி 3 ஓட்டங்களையும், 49-வது ஓவரில் பும்ரா 5 ஓட்டங்களிலும் விட்டுக்களை எடுத்து கட்டுப்படுத்தினர். இதனால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். முகமது நபி பவுண்டரி அடித்து இந்திய ரசிகர்களை திகிலடையச் செய்தார். அடுத்த பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காத வீரர்; முகமது நபி (52 ஓட்டங்கள், 55 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) 3ஆவது பந்தை தூக்கியடித்து பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்தாப் ஆலம், முஜீப் ரகுமான் இருவரும் முகமது ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில் கிளின் போல்டு ஆனார்கள். முகமது ஷமியின் 'ஹாட்ரிக்' விக்கெட் சாதனையோடு இந்திய அணி 11 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 49.5 ஓவர்களில் 213 மாத்திரமே எடுத்தது.

இந்த தொடரில் 5 ஆ-வது போட்டியை எதிர்கொண்ட இந்திய அணிக்கு இது 4 ஆவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தத்தொடரில் 6ஆவது தோல்வியாகும். பும்ரா ஆட்டநாயகனாக தெரிவானார்.

Comment